ஞாயிறு, 28 ஜூன், 2015

எது தான் வளர்ச்சி ?

வாழ்க்கையின் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு விதமான வேறு வேறு அனுபவங்களை கொண்டதாக அமைந்துள்ளது.  ஆனால் எப்பொழுதும், எதிலும் இனிமை தரக்கூடியவை தான் விளையாட்டுக்கள். தொழில்நுட்ப மாற்றங்கள் பலவித மாற்றங்களை வாழ்க்கையில் வழங்கிக் கொண்டு தான் இருக்கிறது. தொழில்நுட்ப வசதி குறைவாக இருந்த காலத்தில் சிறு பருவத்தில் சந்தோஷமாக ஓடி, ஆடி விளையாடும் காலமாக கடந்து வந்ததாக இருந்தது. இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இணையத்தள மற்றும் வீடியோ விளையாட்டுகள் பொழுது போக்காக கொள்ளும் நிலையே காணப்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் போன்றன பொழுது போக்காக விளையாடப்படுகின்ற விளையாட்டுக்கள் மீதான ஆர்வத்தை குறைப்பதாகவும், அவற்றிலிருந்து விலகி இருப்பதாகவும் இன்றைய வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தினை நோக்கிய பயம், எதிர்பார்ப்பு என்பன நிகழ்காலத்தில் எம்மை வாழவிடாததாக மாற்றி விட்டு இருக்கிறது.  
நிகழ்காலத்தில் திளைத்திருக்கும் இன்பத்தையும், நம்மை சூழ்ந்து உள்ள அழுத்தங்களில் இருந்து விடுதலையையும், பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான அறிவாற்றலை பெருக்கவும், நிகழ்காலம் தொடர்பான அவதானத்தை வளர்ப்பதாகவும் இன்னும் பல எண்ணற்ற நன்மைகளை கொண்ட விளையாட்டுக்களை மறந்தவர்களாக வளர்ச்சி அடைந்த, இலகுவான உலகில் வாழ்பவர்களாக பரிணமித்துக் கொண்டிருக்கிறோம்........


"ஓடி விளையாடு பாப்பா - நீ 
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா. 
கூடி விளையாடு பாப்பா" 
- மகாகவி பாரதியார்.

செவ்வாய், 5 மே, 2015

சிந்தித்து பார்க்கிறேன்...............

சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தித்து பார்க்கிறேன்......
சிந்தனைகளின் பரிணாமங்கள் எத்தனை
சிந்தனைகளின் தோற்றங்கள் எத்தனை
சிந்தைகளின் கருக்கள் எத்தனை

எத்தனை எத்தனை பரிணாமங்களில்
எனது பரிணாமம் தனித்துவமானது
என்னுடைய பாதையை தருவது
எனக்கே எனக்கானது
என்னாலே உணரக் கூடியது......

உங்கள் பரிணாமம் வேறுபட்டது
உங்களுக்கே  உரியது
உங்கள் பாதையைத் தருவது
உங்கள் செயல்களைத் தருவது
உங்களை நெறிப்படுத்துவது

என் சிந்தனையில் நீங்களும்
உங்கள் சிந்தனையில் நானும்
நினைத்தாலே வேடிக்கையானது
நிஜத்தினை அழித்திடுவது
என்னை கொன்றிடுவது

என் சிந்தை
உங்களுக்கு இருப்பின்
நீங்கள் நானாவீர்கள்

உங்கள் சிந்தை
எனக்கு இருப்பின்
நான் நீங்களாவேன்

சிந்தித்து பார்க்கிறேன்
தனித்துவங்கள் அழிந்திடுமே

சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தித்து பார்க்கிறேன்
சிந்தனை குறித்து சிந்தித்து பார்க்கிறேன்...................